80,000 எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் – லிட்ரோ என்பதினாயிரம் சமையல் எறிவுவாவு சிலிண்டர்களை இன்று விநியோகித்ததாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ள போதிலும்,கொழும்பு மாநகரம் உட்பட நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
கொழும்பில் இன்று திங்கள் கிழமை விநியோகிக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையில் மக்கள் நள்ளிரவு முதலே லிட்ரோ கேஸ் முகவர் நிலையங்களில் காத்து நின்றனர். என்றாலும், எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களுடன் லொறி வராததால் பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில் அவேஷத்துடன் வெளியேறினர். கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நள்ளிரவு முதல் இன்று நண்பகல் 2 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், ஆத்திரமடைந்த தால், அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் பொலிசார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை சுமுகமாக்கினர். சிலிண்டர் லொறி வரும் என அங்கலாய்ப்புடன் இருந்த மக்கள், முகவர் நிலைய உரிமையாளரிடம் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தனர். என்றாலும், மாளிகாவத்தை விற்பனை முகவர் நிலையம் மூடப்பட்ட நிலையிலே இருந்தது. சிலிண்டர்களுடன் லொறி வருமா? வராதா? என்று ஊர்ஜிதபடுத்த முடியாமல் மக்கள் பொலிசாரின் உதவியுடன் உரிமையாளரை தொடர்பு கொண்டனர். அதன் பின்பே சமையல் எரிவாயு வராது என்பது ஊர்ஜினமானது.
நள்ளிரவு முதல் காத்திருந்த மக்கள் இன்று 2 மணியளவிலே அங்கிருந்து கலைந்து சென்றனர். என்பதினாயிரம் சமையல் எறிவுவாயு சிலிண்டர்களை விநியோகித்ததாக லிட்ரோ நிறுவனம் கூறுகின்ற நிலையில், இன்றும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் னோக்கினார்கள் என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது.இந்த நிலையில், லிட்ரோ கேஸ் நிறுவனம் தவறான தகவல்களை வெளியிடுகின்றதா? அல்லது லிட்ரோ கெரவலப்பிட்டிய முனையத்தில் இருந்து அனுப்பப்படுகின்ற சிலிண்டர்கள் வேறு விதமாக கையாளப்படுகின்றதா? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது.
