14 விடயங்களை சுட்டிக்காட்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட 14 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.

அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாதிரியை உருவாக்குதலும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக் காலத்தில் முறையற்ற நிதியீட்டல்களுக்காக அத்தியாவசியமான பொருட்களில் செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கும் மோசடி வியாபாரிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிப்படையான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்கவும், ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் கடிதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், அரசக் கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குதல், வீண்விரயம், ஊழல் மற்றும் வள துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்க நிலையான திட்டத்தை வகுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்சி பேதமின்றி நாட்டைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *