
நீர் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்தி கொள்வதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய நீர்வளத்தை பெற்று கொள்ளகூடிய மக்களாக வடக்கு மாகாண மக்கள் மாற முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற் துறையின் முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீர் தினம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உலகம் முழுவதுமே நீர் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி இருப்பதன் காரணமாக பெரும்பாலான மக்கள் இந்த நீர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் திகதி கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான பிரதான கருப்பொருளாக தரைக்கீழ் நீர் என்ற தொனிப் பொருளை முதன்மையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
பொதுவாக இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இரு வேறுபட்ட நீர் மூலாதாரங்களில் அது தங்கியுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய பெரும்பாலான நீர் தேவைகள் அதாவது தனி மனிதனுக்கான நீர் தேவைகள் அனைத்துமே 72 வீதம் தரைக்கீழ் நீரினாலேயே நிரப்பப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களில் 88 வீதமானவர்கள். பெரும்பாலும் தங்களுடைய கிணறுகளில் அல்லது தங்களுடைய பிரதேசங்களில் இருக்கின்ற தரைக்கீழ் நீரை நம்பியே தங்களுடைய குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளை நிறைவு செய்கின்றார்கள்.
நெற்செய்கை நடவடிக்கைகள், கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு மேற்பரப்பு நீர்நிலைகளான ஆறுகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றினை நம்பியே மேற்கொள்ளப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அண்மைய ஆண்டுகளில் பூகோள ரீதியில் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவாக தரைக்கீழ் நீராக இருந்தாலும், மேற்பரப்பு நீராக இருந்தாலும் சரி மிகப் பெரிய நெருக்கடியை எதிர் நோக்கி இருக்கின்றது.
தரைக்கீழ் நீர் எதிர்கொள்கின்ற மிகப் பெரிய சவாலாக ஒயில் போன்ற இரசாயன கழிவுகளின் ஊடாக தரைக்கீழ் நீரினுடைய தன்மை மாசடைகின்றது.
அரசு தற்போது எடுத்து வருகின்ற சேதன முறையிலான விவசாய நடவடிக்கைகளின் காரணமாக அசேதன உரங்கள், அசேதன மருந்து நாசினிகள், களை நாசினிகள், கிருமி நாசினிகள் போன்றவற்றின் பயன்பாட்டினால் தற்போது நீர் மாசடையும் தன்மை தற்போது குறைக்கப்பட்டிருந்தாலும் கூட இன்னமும் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு வகைப்பட்ட இரசாயன பொருட்களின் விளைவாக தரைக்கீழ் நீர் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் நீருக்கான கேள்வி அதிகரித்திருக்கின்ற அதே சமயம் நீரினுடைய மீள் நிரப்பும் செயற்பாடுகள் தரைக்கீழ் நீர், மேல் நிரப்பு செயற்பாடுகளாக இருந்தாலும் சரி மிகக் குறைவான அளவில் காணப்படுவதன் காரணமாக நீர் பற்றாக்குறை என்கின்ற ஒரு மிகப் பெரிய நெருக்கடியை வடமாகாணம் எதிர்நோக்குகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
போருக்கு பின்னர் பல்வேறு வகைப்பட்ட கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின் விளைவாக நீர் மிக கணிசமானளவு பயன்படுத்தப்படுகின்றது. நவீன முறைகளை பயன்படுத்தி நீரை பெற்று கொள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் நீரினுடைய மீள் நிரப்புகின்ற அளவில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அதிக அளவான நீரை உட் கொள்வதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பெருமளமான பகுதிகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற சூழ்நிலையை காணலாம்.
ஆகவே வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் மிக விரைவாக விழிப்படைந்து தரைக்கீழ் நீராயினும் சரி, தரை மேற்பரப்பு நீராயினும் சரி, அவற்றை மீள் நிரப்புவதற்குரிய வழிவகைகளை உரிய வகையில் கையாளுதல் வேண்டும்.
வடக்கு மாகாணத்தினுடைய பிரதான நில பகுதியில் காணப்படுகின்ற நீர்ப்பாசன கால்வாய்களும் முறையான வடிகால் அமைப்பு செயற்பாடுகளின் பராமரிப்புக்கு உட்படுத்தப்படவில்லை.
ஒரு குளத்தினுடைய பிரதான கால்வாய்களில் காணப்படுகின்ற உபகால்வாய்களில் நீரை பயிற்செய்கை தேவைக்காக விநியோகம் செய்கின்ற போது அவை பல்வேறு பயிர் செய்யப்படாத பகுதிகளுக்கும் பாய்ந்து நீர் வீண் விரயமாகின்றது.
ஆகவே சரியான வடிகால் அமைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் வடிகால்களூடாக நீர் வீண் விரயமாவதை தவிர்த்து கொள்ளலாம். மக்களுக்கு நீர் தொடர்பான விழிப்புணர்வு இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை.
பெரும்பாலான மக்கள் நீரை வீண் விரயம் செய்கிறார்கள், தவறாக பயன்படுத்துகிறார்கள். தேவைக்கு மேலதிகமாக பயன்படுத்துகிறார்கள், பொருத்தமற்ற காலப்பகுதியில் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே இது போன்ற செயற்பாடுகளை தவிர்த்து நீர் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்தி கொள்வதன் மூலம் ஒரு நிலைத்து நிற்கக்கூடிய நீர்வளத்தை பெற்றுக் கொள்ள கூடிய மக்களாக வடக்கு மாகாண மக்கள் மாறலாம் என மேலும் தெரிவித்தார்.