கோட்டாவின் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க 13 கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதற்கு அரச பங்காளிக் கட்சிகள் உட்பட 13 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 5 கட்சிகள் ‘மதில்மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே உள்ளன. இதனால் மாநாட்டை புறக்கணிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை 18 வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் ‘பெரும்பான்மை’ எதிர்ப்புக்கு மத்தியிலுயே மாநாட்டை நடத்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வகட்சி மாநாடானது ‘மணமகள்’ இன்றி நடத்தப்படும் திருமணம்போலவே அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இதற்காக மார்ச் 23ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குக் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பும் விடுக்கப்பட்டது.

15 கட்சிகளே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளாகும். அதாவது கடந்த பொதுத்தேர்தலில் தமது கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சிகளே அவை. சில கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அவை தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்தபோதிலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், கூட்டணிக்கு ஒதுக்கப்படும் நேரம் மற்றும் சிறப்புரிமைகளில் இருந்தே இக்கட்சிகளுக்கு ஒதுக்கீடுகள் இடம்பெறும்.

எனினும், அக்கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துப்படுத்தும் அரசியல் கட்சிகள் விவரம் வருமாறு:-

  1. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
  2. ஐக்கிய மக்கள் சக்தி
  3. இலங்கைத் தமிழரசுக்கட்சி
  4. தேசிய மக்கள் சக்தி
  5. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
  6. ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி (ஈபிடிபி)
  7. ஐக்கிய தேசியக்கட்சி
  8. எமது மக்கள் கட்சி
  9. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
  10. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
    11.முஸ்லிம் தேசியக் கூட்டணி
    12.தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
  11. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
  12. தேசிய காங்கிரஸ்
    15.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

இதற்கு மேலதிகமாக – அதாவது பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு – நாடாளுமன்றம் அங்கம் வகிக்கும் – தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் விவரம் வருமாறு:-

  1. ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ)
  2. மலையக மக்கள் முன்னண (ராதா)
    3.தொழிலாளர் தேசிய முன்னணி (திகா)
    (மேற்படி கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன.)
  3. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜீவன்)
  4. இலங்கை கம்யூனிஸ் கட்சி ( வீரசுமன)
  5. லங்கா சமசமாஜக்கட்சி (திஸ்ஸ வித்தாரண)
  6. தேசிய சுதந்திர முன்னணி (விமல்)
  7. புதிய ஹெல உறுமய (கம்மன்பில)
  8. மக்கள் ஐக்கிய முன்னணி (தினேஷ்)
  9. ஜனநாயக இடதுசாரி முன்னணி (வாசு)

(மேற்படி கட்சிகள் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘மொட்டு’ சின்னத்தின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட்டன.

  1. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
  2. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)

(மேற்படி கட்சிகள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வீடு சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டன.

அந்தவகையில், சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க 27 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ள கட்சிகள் விவரம் வருமாறு:-

  1. ஐக்கிய மக்கள் சக்தி
  2. தேசிய மக்கள் சக்தி
  3. ஜனநாயக மக்கள் முன்னணி
  4. மலையக மக்கள் முன்னணி
  5. தொழிலாளர் தேசிய சங்கம்
  6. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
  7. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
  8. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
  9. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
  10. தேசிய சுமந்திர முன்னணி
  11. புதிய ஹெல உறுமய
  12. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
  13. ரெலோ

புறக்கணிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படும் கட்சிகள் விவரம் வருமாறு:-

  1. ஜனநாயக இடதுசாரி முன்னணி
  2. இலங்கை கம்யூனிஸ் கட்சி
    15.முஸ்லிம் தேசியக் கூட்டணி
  3. தேசிய காங்கிரஸ்
    17.ஐக்கிய தேசியக்கட்சி

பங்கேற்கும் கட்சிகள் விவரம் வருமாறு:-

  1. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி
  2. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
  3. லங்கா சமாமஜக் கட்சி
  4. எமது மக்கள் சக்தி கட்சி
  5. ஈ.பி.டி.பி.
  6. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
  7. மக்கள் ஐக்கிய முன்னணி
  8. இலங்கைத் தமிழரசுக் கட்சி
  9. புளொட்

(லங்கா சமசமாஜக் கட்சி, எமது மக்கள் சக்தி என்பவற்றின் உறுதியான நிலைப்பாடும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வககட்சி மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானிடம் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இவரும் இன்னும் இரட்டை நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஓர் ஊடக பரப்புரையாகவே சர்வகட்சி மாநாட்டை அரசு நடத்துகின்றது என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்படியான மாநாட்டில் பங்கேற்பதில் பயன் இல்லை என்பதால்தான் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தால் அது ஜனாதிபதியுடன் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் தாக்கம் செலுத்தும்.

எனவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ரெலோ தவிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், புளொட்டும் கூட்டத்துக்குச் செல்லும் முடிவை எடுத்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *