
நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் “நாடாளுமன்ற ஊழியர்கள்” என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளை தாக்கக் கூடும் என்ற சந்தேகம் காரணமாகவே அந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து என்ற பெயரில் தற்போது நாடாளுமன்றத்தின் ஊழியர்கள் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் ஒன்பது இடங்களில் இருந்து ஊழியர்களை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு, எரிபொருள், பால் மா உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் இரவு பகலாக வரிசைகளில் நின்று இந்தப் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்த நிலைமை காரணமாக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பி வருவதுடன் ஆங்காங்கே அதன் வெளிப்பாடுகளை காணக் கூடியதாக உள்ளது.