யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையால் 78 வழக்குகள் பதிவு

மாசி, பங்குனி மாதத்திற்கான திடீர் பரிசோதனை தொடர்பான அறிக்கையை யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் இன்றுவரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றேன்.

மேற்குறிக்கப்பட்ட வழக்குகள் நிபந்தனை அடிப்படையில் பால்மா பொருட்கள் விற்பனை செய்தல், விற்பனை செய்ய மறுத்தல், விலையினை மாற்றி விற்பனை செய்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலையினை வெளிக்காட்டாமை, மற்றும் பொதி செய்யப்பட்ட பொருட்களின் மீது முறையான தரவுகள் வெளிக்காட்டாமை தொடர்பாக பதிவு செய்யப்பட்டவையாகும்

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தொடர்ச்சியாக பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்தி வருகின்றது என்பதோடு இறுதியாக 15.03.2022 பாவனையாளர் தினம் அன்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை நடாத்தி பொதுமக்களிற்கு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

மேலும் அன்றையதினம் திரவ பெற்றோலியவாயு களஞ்சியசாலையில் இருப்பிலிருந்த வாயு கொள்கலன்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பாவனையாளர் அதிகார சபையினால் விநியோகிக்கபட்டது.

யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிற்கு இயன்றளவு சேவையை வழங்க காத்திருப்பதோடு பொது மக்களிடமிருந்து பெறுமதியான முறைப்பாடுகளை எதிர்பார்க்கின்றது. பொது மக்கள் தொலைபேசி அழைப்பினூடாக எந்நேரமும் முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றது.

முறைப்பாட்டு இலக்கம் – துரித சேவை – 1977 -யாழ், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை – 0212229001 -அரச அதிபர் அலுவலகம் – 5000. – என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *