
யாழ்ப்பாணம், மார்ச் 23: முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை, கொடிகாமம், இராமாவில் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நண்பகல் நடந்த விபத்தில், கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி மோதியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டி 50 மீற்றர் வரை தள்ளிச் சென்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டி மோசமாக சேதங்களுக்குள்ளானது.
இதன் போதே முச்சக்கர வண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.