
இந்தியா சென்ற இலங்கை குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, கடற்படையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நேற்றைய தினம் இலங்கையில் இருந்து இரண்டு குடும்பங்கள் புறப்பட்டு சென்றுள்ளது.
இதையடுத்து, இந்தியாவிற்கு சொந்தமான தீடை பகுதியில் மீட்கப்பட்ட மன்னார் பகுதியை சேர்ந்த இரு குடும்பங்களை சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சிவில் உடை தறித்த கடற்படையினர் சென்று அச்சுறுத்தல் விடுத்ததுடன் பெற்றோர்களை கைது செய்ய முற்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்
நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்தியாவில் கைக்குழந்தையுடன் தஞ்சம்புகுந்த குடும்பத்தினரின் பெற்றோர் மற்றும் உறவினர் வீட்டுக்கு சிவில் உடையில் சென்ற கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதுடன் அப் பெண்ணின் தந்தையையும் தாயையும் கைது செய்ய முற்பட்டுள்ளனர்
அதே நேரம் தொடர்ந்து விசாரணை என்ற போர்வையில் அனேகர் வீட்டுக்கு வருவதாகவும் உரிய சீருடை அடையாள அட்டைகள் இன்றி அச்சுறுத்தும் விதமாகவும் கொலை கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் போல தங்களை அச்சுறுத்தும் விதமாகவும் விசாரணைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்
குறித்த அச்சுறுத்தல்கள் மற்றும் விசாரணைகள் தொடரும் பட்சத்தில் தாங்கள் பொலிஸிலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிலோ தான் தஞ்சம் புக வேண்டிய சூழல் ஏற்படும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்