
ஆலையடிவேம்பில் தென்னங்கன்றுகளும் மரக்கறி விதைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது!
வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கிய நாடு எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வீட்டுத்தோட்;ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்ட மரக்கறி விதைப் பொதிகளும் கிராமங்கள் தோறும் வழங்கி தென்னை உற்பத்தியையும் வீட்டுத்தோட்டத்தினையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் முழுவதும் தென்னங்கன்றுகள் வழங்கும் பணி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தலைமையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் இன்றும் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் ஆர்.மதியழகன் ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்ற தென்னங்கன்றுகள் வழங்கும் வேலைத்திட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கியின் முகாமையாளர்களான கே.அசோக்குமார் எஸ்.சுரேஸ்காந்த் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இதனடிப்படையில் ஆலையடிவேம்பு தெற்கு வங்கி மற்றும் வடக்கு வங்கியிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் 2580 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில் 1935 விதைப்பொதிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில் இன்று ஒரு தொகுதி தென்னங்கன்றுகளும் மரக்கறி விதைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பராமரிப்பு முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.