
கிளிநொச்சி- தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத செயல்களுடன் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
*-கடந்த 19 ஆம் திகதி கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் 15 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதோடு அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
*-கடந்த 20 ஆம் திகதி 2500 மில்லிகிராம் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
*-குறித்த தினத்தில் சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் ஒருவரின் சங்கிலியை அறுத்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிஸாரிடம் அகப்பட்ட நிலையில் அவர் சங்கிலியை விழுங்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரிடமிருந்து சங்கிலியை பொலிஸார் மீட்டனர்.
*-காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
*-கல்லாற்று பாடசாலைக்குச் சொந்தமான நீர் இறைக்கும் பம்பி திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
*-கைதுசெய்யப்பட்டவரிடம் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் 3 தண்ணீர் பம்பிகளையும் பொலிஸார் மீட்டனர்.
*-கடந்த 21 ஆம் திகதி வாகன அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய ஐவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
மேற்கூறப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.