
72 கால ஆட்சியின் மிகமோசமான விளைவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில், இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பல ஆண்டுகளாக இருந்து வரும் கடன் சுமையை எமது அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளது.
தற்போதைய கடன் நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டியவர் அல்லர்.
நாடு என்ற முறையில் இது பல பிரச்சினைகள் எழுந்துள்ள காலகட்டம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும் இந்தப் பிரச்சினைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையினால் ஏற்பட்ட பிரச்சினைகள் அல்ல என்பதை நாம் தெளிவுப்பட கூறுகின்றோம்.
எவ்வாறாயினும், 72 வருட கால ஆட்சியின் கெடுபிடிகளினால் நாடு சீரழிந்துள்ளதாக அரசியல் களத்தில் உள்ள சில அதிருப்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டை கையளிக்குமாறு கூறுகின்றனர். 72 கால ஆட்சியின் மிகமோசமான விளைவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
நாட்டை இவ்வாறான கடன் நெருக்கடிக்குள் தள்ளிய தரப்பினர் இன்று வீதிக்கு இறங்கி போராடுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஆளும் கட்சியாகிய நாம் நாட்டை கட்டியெழுப்பும் விடயத்தை முன்னெடுத்துள்ளோம்.
நாட்டில் தற்போது எரிபொருள் இல்லை. எரிபொருளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு டொலர் தேவைப்படுகின்ற நிலையில் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சர் முன்னெடுத்து வருகின்றார்.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இந்த பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை பசுமையான இடத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.