முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வணிக மற்றும் வங்கி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகளும் இணைந்து நடமாடும் சேவை நாளை(24) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் மு.ப 9.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், சமுர்த்தி திணைக்கள வங்கிகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை , மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தொழில் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, விதாதா,NAITA, VTA , அரச, அரச சார்பற்ற வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கவுள்ளன.
எனவே குறித்த நடமாடும் சேவையில் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு
மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
