இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த பேராசிரியர்

நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இயக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டியை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று வடிவமைத்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சி சிறப்பு கண்காட்சி நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு முதல் முறையாக இந்த முச்சக்கர வண்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையின் பேராசிரியர் லிலந்த சமரநாயக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த முச்சக்கர வண்டியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். E வீலர் என அழைக்கப்படும் இந்த மின்சார முச்சக்கர வண்டியானது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீற்றர் வரை பயணிக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டியை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்தும் போது, ​​நாட்டில் உள்ள இரண்டு மில்லியன் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற முடியும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பயன்படுத்தப்படும் பேட்டரியை முச்சக்கர வண்டி உரிமையாளர் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்பதே இதன் சிறப்பம்சம் என அவர் கூறியுள்ளார். வெறுமையான எரிவாயு சிலிண்டரை வழங்கி விட்டு புதிய எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தும் அதே வழியில் பயன்படுத்தப்படும் பேட்டரி இதற்கு பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெறுவதற்கு நாடு முழுவதும் உள்ள சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சாரத்திற்கான சிறிய கட்டணத்தை மாத்திரம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்திட்டத்தை முன்னெடுக்க தனியார் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் பேராசிரியர் லிலந்த சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *