சொந்த மண்ணில் பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.

அத்துடன், தென்னாபிரிக்கா அணியை சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்தி பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றி சாதனைப் படைந்துள்ளது.

சென்சூரியனில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 37 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெனிமன் மாலன் 39 ஓட்டங்களையும் மஹாராஜ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் 5 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 26.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கேசவ் மஹாராஜ் 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டமீம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக டஸ்கின் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *