சர்வ கட்சி மாநாட்டில் ஹக்கீம், ரிஷாட்டின் சகாக்கள் பங்கேற்பு – பங்கேற்றவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட ரிஷாட்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டை புறக்கணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பன தீர்மானித்திருந்தன.

எனினும், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர், மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற முஸாரப் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

“சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை” என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி, அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் கட்சியிலிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டவர்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *