சர்வகட்சி மாநாட்டில் சன்னதமாடிய ரணில்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, ஒரு கட்டத்தில் கடுப்பாகிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மீது கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது. கூட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விளக்கமளித்தார்.

அதில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முன்னைய அரசாங்கமே காரணம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க அஜித் நிவாட் கப்ராலின் கருத்துகளுக்குக் எடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கைக்கமையவே இந்த சர்வக்கட்சி மாநாடு நடைபெறுகின்றது. மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று தனிப்பட்ட ரீதியில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். தற்போதைய சூழ்நிலையில் இது முக்கியம். எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவே இங்கு வந்துள்ளோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல.

கடந்த ஆட்சியால்தான் இந்நிலைமை என விளித்தே மத்திய வங்கி ஆளுநர் விளக்கமளித்தார். இதற்கு நான் பதில் வழங்கப்போனால் என்ன நடக்கும்? இது தொடர்பான வாக்குவாதமே தொடரும். இறுதியில் விஜயன் மன்னன், இங்கு வந்ததால்தான் இந்தநிலைமை என்ற முடிவுக்குகூட வரலாம். அந்த கட்டத்துக்கு நாம் செல்லக்கூடாது.

எதிரணிகளை தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை. நிலைமை பற்றி தெளிவுபடுத்தி, எதிரணிகளுக்கும் விளக்கமளித்து அவர்களையும் இணைத்துக்கொள்வதே எமது நோக்கம் என்று கூறி தமது யோசனைகளை ரணில் விக்கிரமசிங் முன்வைத்தார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்புமூலம் உங்களுக்கு (ரணில்) ஏதேனும் மன வேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *