கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அது பலாத்காரமே!

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பலாத்காரமே என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மனைவி தன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு செய்வதை எதிர்த்து கணவன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

திருமணம் என்பது பெண்களுக்கு எதிராக காட்டுமிராண்டிதனமான செயல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல என குறிப்பிட்ட நீதிபதி, திருமணத்தினால் மட்டும் ஆணுக்கு சிறப்பு உரிமை எதுவும் கிடைத்துவிடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் உடல், ஆன்மா மீது கணவனே ஆளுகை செலுத்துகிறவனாக இருக்க வேண்டும் என்ற பழமைவாத சிந்தனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது மனைவிக்கு உடல் மற்றும் உளவியல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை உருவாக்கும் இடத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் நீதிபதி நாகப்பிரசன்னா வலியுறுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிந்தைய கட்டாய உறவு, பலாத்காரமா இல்லையா என்பதை சட்டத்தை இயற்றுபவர்களை முடிவு செய்ய வேண்டும் என்றாலும் மனைவி பலாத்கார முறைப்பாட்டினை முன்வைத்தால் அதனை கணவன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *