
ராகலை, மார்ச்24
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. டப்ளியு.எம்.லிதுமி ஒமயா என்ற ஐந்து வயது சிறுமி என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ராகலை மந்திரிதென்ன கிராமத்தில் வனப்பகுதி வளான பகுதியில் வீடு கட்டி தனது தாய், தந்தையுடன் வசித்துவந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மரமொன்றில் குளவிக் கூடுகட்டியிருந்துள்ளது.
கடந்த (20) திங்கட்கிழமை மதியம் விவசாய நிலத்திற்கு சிறுமியும், அவரின் தாயும் சென்றுள்ளனர். அங்கு குளவிக் கூடு கலைந்து இருவரையும் தாக்கியுள்ளது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், குளவிக் கொட்டிலிருந்து இவர்களை மீட்டு உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இருவரையும் கொண்டுசென்றுள்ளனர்.
இருவருக்கும் அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த போதும் செவ்வாக்கிழமை சிகிச்சை பலனின்றி ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் குளவித் தாக்குதால் பாதிக்கப்பட்ட தாய்க்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.