உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

உலக காச நோய் தினமான இன்று வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட வைத்தியசாலை, காச நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.

இதன் போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் காச நோயை முடிவுக்கு கொண்டு வர முதலிடுவோம், உயிர்களை காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டு பிரிவில் இருந்து வவுனியா மணிக்கூட்டு கோபுரம் ஊடாக பஜார் வீதியினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.

பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 17553 பேருக்கு காச நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு 336 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் 48 பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *