
கொழும்பு, மார்ச் 24
ஜனாதிபதியுடன் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது, அரசியல் தீர்வு குறித்தே அவதானம் செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுமந்திரன் கூறியமாவது,
நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரொலோ தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அவ்வாறு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கான இணக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான இணைப்பு பாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழும்.
எவ்வாறாயினும், அதிகாரப்பகிர்வு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வுக்கான பணிகளை அரசாங்கம் முன்னெடுத்தால் மாத்திரமே இது சாத்தியமாகும் என தெரிவித்தார்.