
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும் துணிச்சலான முடிவை வரவேற்கின்றோம். அத்துடன் இலங்கை ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க எடுத்திருக்கும் முடிவும் முக்கியமானது. அதேநேரம் இலங்கை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். ஜனநாயக செயற்பாடுகளுக்கான சூழலை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வந்துள்ள அவர், இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பின்னர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடனான – அதிக வலுவான -அதிக ஜனநாயக தன்மை மிக்க அதிக வளம் மிக்க- அதிகளவு நியாயமான இலங்கைகக்கான எங்களின் பகிரப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் ஆழமான பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். அண்மைய வாரங்களில் எடுக்கப்பட்டுள்ள நீதியை நோக்கிய- காயங்களை ஆற்றுவதை நோக்கிய – மனித உரிமைகளை நோக்கிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகின்றோம்.
உலக வரலாற்றில் நெருக்கடியான வரலாற்றை கொண்ட பல நாடுகள் செயற்பட்டதை போல உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைக்கும் எண்ணம் – முக்கியமாக தென்னாபிரிக்க அனுபவத்தை பயன்படுத்தும் யோசனை மிகச்சிறந்தது – அதற்கு ஆதரவளிப்பதற்கு ஆர்வமாக உள்ளோம். அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பை – தடுத்து வைத்தலை – துன்புறுத்தல்கள் முடிவுக்கு கொண்டு வரவேண்டியதை நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம்.- என்றார்