
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தப்பிவரும் தமிழர்களை மண்டபத்தில் உள்ள வீடுகளில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இலங்கைக்கு 7,500 கோடி ரூபாயை கடனாக கொடுத்து இந்தியா உதவி செய்தது.
இருப்பினும், அங்கு ஒரு கிலோ அரிசி 500 ரூபாய் வரையும், சர்க்கரை 290 ரூபாய்க்கும், 400 கிராம் பால் பவுடர் 790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் டீக்கடைகளில் ஒரு கோப்பை டீ.100 ரூபாய்க்கும், பெட்ரோல் 254 ரூபாய்க்கும், டீசல் 214 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும், பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடிப்பதோடு, சில இடங்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியதால், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்துடன் பேப்பர் வாங்க பணம் இல்லாததால், தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நிர்வாகத் திறமையின்மையே இதற்கு காரணம் என்றும், இந்தியா கொடுத்த நிதியுதவியையும், சரியான முறையில் இலங்கை அரசு செலவு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளன.
இதனிடையே, இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் வந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம் அடுத்த, மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக வீடுகள் தயார் நிலைப்படுத்த அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏற்கனவே மண்டோ முகாமில் அகதிகளாக வந்தவர்கள் தங்கியிருந்து, தங்கள் தாய் நாடான இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் தங்கிச் சென்ற காலியாக கிடக்கும் வீடுகளை சுத்தம் செய்து, அதனையும் தயார்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.