
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் – பனிக்கன்குளம் கிராமத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இடத்தை சுற்றி வளைத்த பொலிசார், அங்கிருந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (22) பனிக்கன்குளம் பகுதியில் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மாங்குளம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த இடத்தை சுற்றி வளைத்த மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தில் இருந்த 6 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரும் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவர்களை, நேற்று (23) முல்லைத்தீவு மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன் போது அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு தரப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வருகை தந்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பனிக்கன்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் 6 பேரில் பாணந்துற, மொரட்டுவ ,கிளிநொச்சி ,மாங்குளம் உள்ளிடட பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்