எந்தவொரு ராஜபக்சவையும் இனி ஆட்சிக்குக் கொண்டு வர ஒத்துழைத்து நாம் முயற்சி செய்ய எமக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவரிடம் வினவப்பட்ட கேள்வி மற்றும் பதில் வருமாறு,
கேள்வி – நேற்றைய சர்வ கட்சி மாநாட்டில் நீங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை , இருந்தாலும் நேற்றைய மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தான் தனித்துவமாக விளங்கினார்! இந்த அரசாங்கம் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதற்காக ரணிலைப் பயன்படுத்தும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதா?
பதில் – ரணில் விக்கிரமசிங்கவை பயன்படுத்துகிறார்களா இல்லையா அல்லது அவர் தாமாக விருப்பத்தில் பயன்படுகின்றாரா என்பது இங்கு முக்கியமில்லை! எவ்வாறாயினும் நேற்றைய சர்வ கட்சி மாநாட்டிலும் நிதி அமைச்சரின் நடத்தையில் அவருடைய சுயநலத்தைக் காண்பித்துக்கொண்டார் , முன்னாள் பிரதமர் என்ற வகையில் அவருக்கான மரியாதையைக் கொடுக்காமல் இவர் நடந்துகொண்டார்.
சர்வகட்சி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்வது அனைவரும் சமாதானமாக இணைந்து வேலை செய்யத்தான்! ஆனால் அவருக்கு அங்கும் முரண்பாடு தான் தேவைப்படுகின்றது,இப்படியான ஒரு அவலட்சணமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு எம்மால் இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.
நாம் மிக விரைவாக இந்த அரசாங்கத்திற்குள்ள 113 பெரும்பான்மையை இல்லாமல் செய்து இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்!
கேள்வி – நீங்கள் இதை செய்வது ஒரு ஒப்பந்தம் என்று அவர்கள் சொல்கின்றார்கள். தற்போது பசில் ராஜபக்சவை எதிர்த்து விட்டு 2025 இல் நாமல் ராஜபக்சவை அழைத்துவரத் தான் இதை செய்வதாகச் சொல்கிறார்களே!
பதில் – ஐயோ ,எந்தவொரு ராஜபக்சவையும் இனி ஆட்சிக்குக் கொண்டு வர ஒத்துழைத்து நாம் முயற்சி செய்ய எமக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை. அப்படி யாரவது சொல்வார்களாயின் அது அரசாங்கத்தில் அவர்களுக்குப் பாதிக்கும் என்ற பயத்தில் தான் அப்படி பொய் சொல்வார்கள்.
நாம் இந்த நாட்டை நேசிப்பதால் தான் நாம் அரசியல் செய்கின்றோம் பதவிகளைப் பற்றி நாம் எண்ணுவதில்லை, பதவிகளைத் துறக்கும் அளவுக்கு எண்ணம் வந்தது இந்த நாட்டை நாம் நேசிப்பதால் தான். இந்த நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பதையும் ,இந்த நாடு இன்னொரு நாட்டின் கொலனியாவதையும் எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
அதனால் தான் நாம் இப்படியான தீர்மானங்களை எடுக்கின்றோம். அப்படியிருந்தும் சிலர் வேறுவிதமான கருத்துக்களை கூறுவார்களாயின் அவர்களிடம் ஏன் நீங்கள் இப்படி முட்டாளாக இருக்கின்றீர்கள் என்று தான் கேட்டாக வேண்டும்.