ரஷ்யாவின் பிரமாண்ட போர்க்கப்பலை அழித்தது உக்ரைன்

கிவ், மார்ச் 25

 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 1 மாதம் ஆகி உள்ளது. ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் என அறிவித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள் என தாக்குதல் எல்லையை ரஷ்யா விரிவுபடுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

இதுநாள் வரை நடந்த போரில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 64 சுகாதார கட்டமைப்புகள் தாக்கப்பட்டு, 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.  இதற்கிடையே ஒரு மாத கால போரில் உக்ரைனில் ரஷ்ய படையினர் 15 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளது.  

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கடந்த மாதம் 27-ந் திகதி முதல் இருந்து வருகிற பெர்டியன்ஸ் நகர் அருகே ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க்கை, உக்ரைன் படைகள் நேற்று அழித்துள்ளன.  இதையொட்டிய படங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இந்த நகரம் மரியுபோல் நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டுள்ள போர்க்கப்பல் 20 டாங்குகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். 

இந்த கப்பல் அழிக்கப்பட்டதை உக்ரைன் துணை ராணுவ அமைச்சர் ஹன்னாமல்யார் உறுதிப்படுத்தினார்.ரஷ்ய படைகள் பிடித்து வைத்துள்ள கெர்சன் நகரில், புகழ் பெற்ற நாடக இயக்குனர் ஒலெக்சாண்டர் டகாஷெங்கோவை 9 ராணுவ வாகனங்களுடன் வந்து ரஷ்ய படைகள் பிடித்துச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அண்டை வீட்டினர் யாரேனும் வெளியே வந்தால் கொல்லப்படுவார்கள் எனவும் ரஷ்ய படையினர் மிரட்டி உள்ளனர். 

உக்ரைனில், தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய படைகள் நேற்று காலை பயன்படுத்தியதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதே நேரத்தில் அவர் இது குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *