
யாழ்ப்பாணம், மார்ச் 25: இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடன், இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடிக்கு உதவி அளிக்க வேண்டுமே தவிர வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்ககூடாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கடல் வளத்தில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்யக் கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எமது கடல்வளங்கள் குத்தகை அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதனை ஏற்கமுடியாது.
நீண்ட காலமாக இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சனை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கு பின்பு இந்திய மீனவர்களின் அத்துமீறல் இலங்கை கடற்பரப்பில் குறைவடைந்திருந்தது. ஆனால் தற்போது இந்திய கடற்றொழிலாளர்கள் மீண்டும் முப்பது நாற்பது இழுவைப் படகுகளில் அத்துமீறிவந்து நமது கடல் வளத்தை அழிக்கின்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இந்திய துணைத் தூதரை சந்தித்து
முறையிட்டுள்ளோம்.
அந்த கோரிக்கையை முன்வைத்ததன் பயனாக இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அதேபோல அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எமது கடல்வளம் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் தவிர கைது செய்து விடுதலை செய்வது என்பது ஒருபோதும் தீர்வாக அமையாது.
தயவுசெய்து இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் நாங்கள் கோருவது என்னவென்றால் மீனவர் பிரச்சினைக்கு மிக விரைவாக ராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பித்து அதனூடாக தீர்வை காணவேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவிடமிருந்து பல மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை கடனாக பெற்றுள்ளது. அந்த நிதியானது இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடிக்கு உதவி அளிக்க வேண்டுமே தவிர வடக்கு கடற்றொழிலாளர்களான எங்களுடைய வயிற்றில் அடிப்பதாக இருக்ககூடாது.
இந்தியாவிடம் நிதியைப் கொண்டு இந்திய மீனவர்களை எமது கடல் பகுதிக்குள் அனுமதிப்பதாக இருக்கக் கூடாது என்றார்.