கூட்டமைப்பின் வலைக்குள் வீழ்ந்த கோட்டா – தமிழ் மக்களின் 4 முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் இடையே இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு தொடர்பில் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

1.அரசியல் கைதிகளின் விடுதலையில் ஜனாதிபதியின் தலையீடு இருக்கும்.

2.மக்களின் நிலங்கள் படைகளால் பறிக்கப்படாது.

3.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தெளிவான விசாரணை நடாத்தப்படும்.

4.வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படும்,

எங்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அன்பாக வரவேற்றார். நீண்ட காலம் தவிர்க்க முடியாத காரணத்தால் கசந்திப்பு பிற்போடப்பட்டது. இன்று தான் சந்திக்க கிடைத்தது என்றார். புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் நாம் குறியாக இருந்தோம்.

இதற்கான நிபுணர் குழு அறிக்கை, அதன் மொழி பெயர்ப்பு இரண்டு மாதங்களில் எமக்கு கிடைக்கும் என பேராசிரியர் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். அதில் கிடைத்தவுடன் பேச்சு வார்த்தை நடைபெறும். அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

அதுவரையில் உடனடியாக செயற்படுத்தப் படவேண்டிய 4 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார்.இது பற்றி நீதி அமைச்சர் என்னுடன் கலந்துரையாடுவார். பயங்கரவாத தடுப்புச் சட்ட சீரமைப்பின் கீழ் இந்த நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்படும்.

இரண்டாவது விடயம் வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு. இராணுவ தேவைக்காக எந்தவொரு நிலமும் இனி கையகபடுத்தப்பட மாட்டாது. பிரதேச, மாவட்ட எல்லைகள் தற்போது மாற்றப்படாது. எம்முடன் பேசும் வரை அந்த நடவடிக்கை நிறுத்தப்படும்.

எம்முடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். நீண்ட கால விவசாய செய்கையில் ஈடுபடும் மக்களின் நிலங்களுக்கும் தடை ஏற்படாது. இனப்பரம்பலை ஏற்படுத்தும் செயற்பாடு நிறுத்தப்படும்.

மூன்றாவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவது தொடர்பில் நாம் கேட்டிருந்தோம். அது காணாமல் போன உறவுக்கான கொடுப்பனவு இல்லை. போராடும் மக்களுக்கு வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் உதவி. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட பின்னணி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்ற தெளிவான விசாரணை நடாத்தப்படும் என ஜனாதிபதி உறுதி மொழி வழங்கியுள்ளார்.

நான்காவது விடயமாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களும் சிறப்பு அபிவிருத்தி நிதி உருவாக்கப்படும். அதற்கு புலம் பெயர் தேசத்தின் உதவி வரவேற்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *