
மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தி குற்றச்சாட்டில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சியங்களை இனி விசாரிப்பதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முதலாவது சாட்சியாளர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் இருக்கும் கையெழுத்தை ஏற்க முடியாது என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வழக்கில் முன்னிலையான அரச சட்டத்தரணியான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இனிவரும் காலங்களில் வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சியங்களை விசாரிக்காது வழக்கை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அறிவிப்பாணைக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த சாட்சியாளர்கள் நீதிமன்றம் விடுத்துள்ளது.
முறைப்பாட்டாளர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதால், தமது தரப்பு வாதிகளை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்படலாம் என சட்டத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே திவிநெகும உட்பட சில வழக்குகளில் இருந்து பசில் ராஜபக்சவை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.