காணிகளை சுவீகரிக்கிறோமா? சுமந்திரனை கேட்டார் இராணுவ தளபதி!

வடக்கு – கிழக்கில் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுடன் நேற்று தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு இடம்பெற்றது.

இந்த பேச்சின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டன.

தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றமை குறித்து கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டதுடன், இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

இதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக ஜனாதிபதி கூட்டமைப்பிடம் உறுதியளித்தார்.

இந்த பேச்சு முடிந்து சிறிது நேரத்தில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுமந்திரன் எம்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இராணுவத்தினரால் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முறையிட்டமை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் இராணுவத்தினரின் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் குறித்து தான் உடனடியாக ஆராய்வதாக சுமந்திரனிடம் உறுதியளித்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *