
இலங்கையின் பொருளாதாரம் மேன்மையடைய வேண்டுமெனின், தமிழர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்து பொறுப்புகள் வழங்கவேண்டும் என மலேசியா நாட்டின் மக்கள் சக்தி இயக்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்துள்ளார்.
மலேசியா நாட்டின் மக்கள் சக்தி இயக்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தனது மனைவி டத்தீன்ஸ்ரீ வேநீயுடன் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்ய வந்திருந்தனர். இவர்களுடன் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனனி பாலுவும் வந்திருந்தார்.
இவர்களை ஆலயத்தின் வாயிலில் வைத்து கோவிலின் மூத்த அர்ச்சகர் நடராஜன் சாஸ்திரிகள் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளருமான வி. சோமசுந்தரம் ஒரு சில நிமிடங்கள் உரையாடினார். அம்பாளை தரிசனம் செய்த பின்னர் நமது செய்தியாளரிடம் மக்கள் சக்தி கட்சியின் தேசியத்தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அளித்த பிரயேத்திக பேட்டி.
இந்திய நாட்டில் சுமுகமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது.
மலேசிய நாட்டில் 60 ஆண்டுகளாக தேசியக் கூட்டணி கட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியினர் அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனர். அதெல்லாம் பொய்யான வாக்குறுதி என்பதால் வாக்களித்த மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு உள்ளார்கள். இன்னும் இரண்டொரு மாதங்களில் வருகின்ற பொதுத்தேர்தலில் நிச்சயமாக இந்தியர்கள் ஏமாற மாட்டார்கள்.
மலேசிய நாட்டில் நல்லாட்சி மலர வேண்டுமென்றால் மக்கள் மீண்டும் தேசிய முன்னணி கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. மலேசிய நாட்டிலுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக போட்டியிடுவார்கள். தேர்தல் குண்டான வேலைப் பணிகள் செய்து கொண்டுள்ளோம். காஞ்சி அம்பாளின் ஆசிர்வாதத்துடன் மலேசியாவில் நல்லாட்சி மீண்டும் மலரும் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சீனாவை நம்பிதான் இலங்கை நாசமாகிவிட்டது.
இந்தியாவைப் போன்ற வல்லரசு நாடுகளை நம்பி வந்தால் தான் அங்கு மீண்டும் மறுமலர்ச்சி தோன்றும். இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் மீனவர்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல் மூடப்பட்டுள்ள துறைமுகங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்து பொறுப்புகள் வழங்கவேண்டும். ஏற்கனவே தமிழர்களிடத்தில் தான் பொருளாதார வளர்ச்சி இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை வரவைக்க வேண்டும். அப்போது தான் வேலை வாய்ப்புகள் பெருக செய்யும். பொருளாதாரம் மேலோங்கும்.
இலங்கையிலுள்ள பாமர மக்களுக்கு அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் . விலை வீழ்ச்சியால் தான் அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகின்றது. அரிசி, பருப்பு, மா பொருட்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வந்து விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தனியார் வசம் அளித்தால் லாப நோக்கத்தோடு தான் செயல்படுவார்கள்.- என்றார்.