
பிலிப்பைன்ஸ் நில அதிர்வு முகாமைத்துவ மையம் எரிமலை எச்சரிக்கை நிலையை இன்று இரண்டில் இருந்து அதி அச்சுறுத்தலான 3 ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இதனையடுத்து எரிமலைக்கு அருகில் உள்ள ஐந்து கிராமங்களைச் சோ்ந்த சுமார் 12,000 பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாக பிராந்திய சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கெல்வின் ஜான் ரெய்ஸ் ஏ.எப்.பி. செய்தி முகாமையிடம் தெரிவித்துள்ளார்.
இன்று தால் எரிமலைக்கு அருகில் உள்ள ஒரு வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் மற்றும் புகை வானை நோக்கி எழுந்துள்ளது. மணிலாவின் தெற்கே உள்ள ஒரு ஏரியில் அமைந்துள்ள தால் எரிமலை இன்று காலை உள்ளூர் நேரம் 7.22 மணிக்கு சிறிய வெடிப்பைப் பதிவு செய்தது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பெரிய வெடிப்பு சாத்தியமாகலாம். இது ஆபத்தானதாக இருக்கலாம். பாரிய வெடிப்பு ஏற்பட்டால் பெருமளவு புகை, சாம்பல் மற்றும் எரிமலைக் குழம்புகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக 2020 ஜனவரியில் தால் எரிமலை வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்பை அடுத்து 15 கிலோமீற்றர் உயரத்தில் வானில் சாம்பல் எழுந்தது. அத்துடன் எரிமலை நெருப்புக் குழம்புகளை உமிழ்ந்ததால் ஏராளமான வீடுகள் நாசமாயின. சுமார் 1.35 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.