யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது மட்டுவில் பகுதியில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கலந்துரையாடல் யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன்போது பிரதமரின் வருகையின் போது இடம்பெற்ற போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பொலிஸாரால் தாக்கப்பட்டமை மற்றும் அநாகரிகமாக நடத்தப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரியளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு வருகிறது. குறித்த கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு மாகாணத்தின் செயலாளர் ஆ.லீலாவதி தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மு.பா.உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வேலன் சுவாமி, யாழ் மாவட்ட மீனவ சம்மேளத்தின் பிரதிநிதிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்சி அரசியலுக்கு அப்பால் அனைவரையும் இப்போராட்டத்தில் ஒன்று திரளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *