
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இன்று (26) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்களின் உறவினர்கள், சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தமிழக மீனவர்களை நிர்வானப்படுத்தி விசாரித்த இலங்கை அரசுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை காலை ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் அன்றிரவு தனுஷ்கோடிக்கு இரனைதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்களையும் அவர்களது 2 மீன்பிடி விசைப்படகுகளையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்பாட்டம் நடத்தி இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்களின் உறவினர்கள் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய கோரி கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு நிர்வானப்படுத்தி விசாரிப்பதாகவும், கைது செய்யப்படும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி தகாத வார்த்தைகளால் திட்டுவதாக இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசின் இந்த செயலுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.