
கொழும்பு, மார்ச் 26
தனது இராஜ்ஜியத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தனது மகளையே மன்னர் ஒருவர் (களனி திஸ்ஸ மன்னர்) கடலுக்கு பலிகொடுத்தார். எந்த தந்தையால்தான் இப்படியான தியாகத்தை செய்ய முடியும்? இருந்தும் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார். இவ்வாறு செய்யுமாறு நாம் உங்களிடம் கோரவில்லை, குறைந்தபட்சம் பஸில் ராஜபக்சவை ஒதுக்கிவைத்துவிட்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய பிக்கு அறிஞர்களின் கருத்தரங்கு’ அமைப்பின் பிரதானியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்.
2019 ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபட்ட முக்கிய தேரர்களில் இவரும் ஒருவர். சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக அறுவடை செய்யும் நோக்கில் பரப்புரை கூட்டங்களின்போது தேசியவாதத்தை விதைத்தார். இன உணர்வைத் தூண்டும் விதத்தில் அனல் பறக்கும் அறிவிப்புகளை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதயகம்மன்பில உட்பட 11 கட்சிகள் அணியின் பிரதிநிதிகளுக்கும், தேசிய அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26.03.2022) நடைபெற்றது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், புத்திஜீவிகளும் மேற்படி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
மேற்படி சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது தேரர் கூறியவை வருமாறு,
“ பஸில் ராஜபக்ச என்ற நபரால்தான் 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை நாம் உணர்ந்தோம். எனினும், தேரரே, என்னை நம்புங்கள், புதிய அரசமைப்பில் இரட்டை குடியுரிமை என்ற இடத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கினார்.
சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் புதிய அரசமைப்பை கொண்டுவரமுடியாமல்போய்விட்டது, அந்த பணியை முன்னெடுக்க தங்களால் முடியுமா என ஜனாதிபதியிடம் நான் வினவினேன். நானும் அவர்கள் போன்ற ஒருவர் என்றா நீங்கள் கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி திருப்பி கேட்டார். ஆனால் இன்று 11 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்தும் நிலைக்கு நாடு வந்துள்ளது.
கொரோனா மட்டும் தற்போதைய காரணம் அல்ல, ஆட்சிக்கு வந்தபிறகு மனிதனர்கள் மாறிவிடுகின்றனர். அதனால்தான் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கியத்துவத்தை உணருங்கள்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச என்னை சந்திக்க வந்தார். அப்போது நான் விடயமொன்றை சுட்டிக்காட்டினேன். இந்நாட்டில் மன்னர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டுக்காக தனது மகளையே கடலில் போட்டார். எந்த தந்தையால் இப்படி செய்ய முடியும்? ஆனால் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார். இவர்களை கடலில் போட வேண்டாம், சற்று ஒதுக்கிவைத்துவிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரினேன். பஸில் ராஜபக்சவை அரவணைக்க நாட்டு மக்கள் தயார் இல்லை.” – என்றார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க, களனி திஸ்ஸ மன்னன், தனது மகளை கடலுக்கு பலிகொடுத்தார் என பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.