அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஒப்பந்தம்!

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டுள்ளது.

படகு மூலம் சட்டவிரோதமாக வரும் எவரும் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் கூறினார்.
குறித்த திட்டத்திற்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்த இது குறித்த இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
தற்போது நவுறு தீவில் உள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர்.

அந்த வகையில் நவுறுவில் சுமார் 112 பேரும், ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் 1168 பேரும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா போன்ற மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தப்படுவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள் என குறிப்பிடப்படுகிறது.

கடல்கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 150 அகதிகளை வருடமொன்றுக்கு ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்த இறுதி ஒப்பந்தம் சுமார் 9 ஆண்டுகளின் பின் இரு நாடுகளுக்கிடையில் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *