மாகாண சபை முறைமையே சாத்தியமானது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழர் தரப்புக்கள் வந்துள்ளனர்! டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற, 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையே சாத்தியமானது என்ற நிலைப்பாட்டுக்கு தற்போது தமிழர் தரப்புக்கள் வந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் யாழ் தலைமை செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதிய தரப்புகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தரப்புகள் என்பன 13ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபையையே வலியுறுத்தியுள்ளனர்.

இதை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈ.பி.டி.பி. வலியுறுத்திய சந்தர்ப்பங்களில் எல்லாம், எம்மை தமிழ் மக்களுக்கு விரோதமானவர்களாகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான கருத்துக்களை தெரிவிப்பவர்களாகவும் இதே தரப்பினர் மக்களிடம் கூறிவந்தனர்.

சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு மட்டற்ற அதிகாரங்களூடனான தீர்வினை வழங்கும் என்றும் கூறிவந்தனர்.

ஆனால், ஈ.பி.டி.பி. கட்சியினால் முன்வைக்கப்படுகின்ற நிலைப்பாடுகளும் பொறிமுறைகளுமே யதார்த்தமானது என்பது சர்வதேச நாடுகளினாலும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது அரசியல் இருப்பிற்காக காலத்துக்கு காலம் சுருதியை மாற்றுகின்ற குறித்த தமிழர் தரப்புக்கள் இப்போது எமது வழிமுறைக்கு வந்துள்ளனர்.

இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தெளிபடுத்துவதன் மூலம் எதிர்காலத்திலாவது மக்கள் ஏமாறாமல் சரியானவர்களை தெரிவு செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என கூறினார்.

Tags: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *