
நிதி அமைச்சரின் அண்மைய விஜயம் தொடர்பில் இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உட்பட ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய போது நிபந்தனைகள் ஏதும் இல்லை எனவும், ஆனால் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிக்கை மற்றும் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் முதலில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு முன்னதாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டியிருந்த நிலையில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதாவது, அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கையெழுத்திடும் நடைமுறையை முற்றிலும் மீறி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்பதே இதன் பொருள்.
இலங்கையின் நிதியமைச்சராகப் பதவி வகிக்கும் ஒரு அமெரிக்கக் குடிமகன், இன்று அமெரிக்காவுடன் இணைந்திருக்கும் மோடியுடன் இதைச் செய்கிறார்.
அந்த பிரஜைகளுக்கு இலங்கை மக்களின் எந்தவொரு பாரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய அவசியமில்லை என்றே கூறவேண்டும்.
அதுமட்டுமின்றி, அடிப்படைக் கேள்விகளுக்கு கூட அரசால் பதிலளிக்க முடியவில்லை.
மேலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்காக மார்ச் 12ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பின்னணியில் ஒரு திட்டம் உள்ளது.
இதற்காக ஒரு அமெரிக்க டாலருக்கு LKR 188.06 செலுத்த வேண்டும். இப்போது அமெரிக்க டொலர் ஒன்று ரூ 290 ஆக இருக்கும் போது எப்படி இப்படி ஒரு நிபந்தனை போட முடியும்?
அவசரகால கொள்முதலின் கீழ் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான இந்த ஒப்பந்தம் 5 வருட காலத்திற்கு நீடிக்கப்படவுள்ளது.
இவை பற்றி மக்களிடம் பேசுவதில்லை. மின்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கலாம். இதுதான் உண்மை நிலை.
இதுபோன்ற நெருக்கடிகளை உருவாக்கி, பல்வேறு குற்றங்களுக்கு பதில் தேடப்படுகிறது, என்றார்.
‘ராஜபக்ஷ குடும்பம்’ யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக தமது இனவாதத்தைப் பயன்படுத்தியதும் இப்படித்தான்.
எனவே, இது கோவிட் நெருக்கடி அல்லது பொருளாதார நெருக்கடி அல்ல. அந்நிய செலாவணி நெருக்கடியைக் காரணம் காட்டி மக்களைச் சுரண்டுகிறார்கள்.
இந்த துரோகிகளை தோற்கடிக்க வேண்டும். இந்த நிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்- என மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.