
தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி கோட்டா வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என ஈ. பி. ஆர். எல் எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழா விழித்திரு ” என்ற இணைய வழி கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவை மீறி வேறு நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இந்தியாவை வைத்து தான் எமது காரியங்களை நிறைவேற்ற வேண்டும். கிடைப்பதை விடுவதற்கு நாம் தயாராக இல்லை. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாண சபைகளுக்கு, கொஞ்சம் கிடைத்தால் சந்தோசம் தான்.
தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் கோட்டாவுக்கு,பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆகவே நாம் தமிழ் மக்களுடனும் சேர்ந்து நிற்கின்றோம், என்பதை சிங்கள மக்களுக்கு காட்டவே கோட்டா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
இதனை அறியாமல் ரெலோ தவிரந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றுள்ளது.
அங்கே கூறிய எதையும் கோட்டா அரசு செய்யாது. காணிகளை அபகரிக்க மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள். நான் ஒன்றை கேட்க விரும்புக்கின்றேன்.
வயது போன காலத்தில் புத்தருக்கு சேவை செய்யும் நோக்கில் யாழ் வந்த பிரதமர் மகிந்த, நாவற்குழி, கந்தரோடை, உள்ளிட்ட இடங்களில் விகாரை அமைக்கும் பணிகளை பார்வையிடுவதற்கு தான் வந்திருந்தார்.
காணி அபகரிப்பை மேற்கொள்ளும் அலுவலகம் மகிந்தவின் அமைச்சின் கீழே உள்ளது. வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு இல்லை என்றால் குறித்த அலுவலகம் இல்லாமல் செய்யப்படுமா?
ஆகவே கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாவுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் பயனற்றது. துட்டகைமுனு மன்னனின் மறு பிறவியாக கோட்டா தன்னை காட்டிக் கொள்கின்றார் என்றார்.