கிட்னியை விற்று ஆரம்பித்த பலசரக்கு கடை; தீயில் எரித்து நாசமாக்கிய விசமிகள் – நீதிகோரும் கடை உரிமையாளர்

பூங்குடுதீவில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றதாக கடை உரிமையாளர் க.பாலசிங்கத்தின் மனைவி தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூங்குடுதீவு – 1ம் வட்டாரம் சந்தியடியில் எமது பலசரக்கு கடை (பி.ஏ.ஸ்டோர்ஸ்) அமைந்துள்ளது.

நேற்றிரவு வழமை போலவே கடையை மூடிவிட்டு 9 மணியளவில் வீடு திரும்பியிருந்தோம்.

இந்த நிலையில், எமது கடை தீப்பற்றி எரிவதாக கடைக்கு எதிரே உள்ள பிரதேச சபை உப அலுவலகத்தின் காவலாளி அழைப்பை ஏற்படுத்தி எமக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, கடைக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கிருந்து அனைத்து பொருட்களும் மீதமின்றி தீக்கிரையாகி காணப்பட்டது.

தொடர்ச்சியாக காணப்பட்ட மரக்கறி கடை, தையல் கடை, பலசரக்கு கடை ஆகிய மூன்றும் முற்றாக எரிந்துள்ளது.

இதில் இரண்டு குளிர்சாதன பெட்டி, அலுமாரி உட்பட எட்டு லட்சம் பெறுமதியான பொருட்களும் ஒரு லட்சத்து 15 ஐயாயிரம் ரூபா காசுமென மொத்தமாக 12 லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

எனினும், பொலிஸார் நடத்திய விசாரணையில் மின் ஒழுக்கு எதுவும் ஏற்படவில்லையென உறுதியாக தெரிவித்தனர்.

எனது கணவர் மிகவும் வறுமையான நிலையில் 2009ம் ஆண்டு, இடம்பெயர்ந்து 20,000 ஆயிரம் முதலுடன் கடையை ஆரம்பித்தார்.

எனது கணவர் வறுமையின் பிடியில் சிக்கி கிட்னியை விற்று வாழ்க்கை நடத்தி முன்னேறி வந்த நிலையில், இன்று இவ்வாறு இடம்பெற்றுள்ளதென கவலை வெளியிட்டார்.

அத்துடன், தமது கடையில் சிசிடிவியும் பொருத்தவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் தமக்கு எதிரிகள் யாரும் இல்லை எனவும் பொலிஸார் விரைந்து இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *