போர் நிறுத்தத்தை மீறும் அசர்பைஜான்: ரஷ்யா குற்றச்சாட்டு

யரிவன், மார்ச் 27: அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது. அந்த போரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷியாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது.

மேலும், அர்மீனியா – அசர்பைஜான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட நாக்ரோனா-கராபாக் மாகாணத்தில் ரஷியாவின் அமைதிப்படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்க நாக்ரோனா-கராபாக்கில் ரஷிய படைகள் குவிக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமைதியை நிலைநாட்ட தங்கள் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பகுதியில் அசர்பைஜான் அத்துமீறி நுழைந்துள்ளதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அசர்பைஜான் படைகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. அசர்பைஜானின் இந்த நடவடிக்கை அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா ஏற்கனவே போர் தொடுத்துள்ள நிலையில் தற்போது அசர்பைஜான் படைகள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், நாக்ரோனா-கராபாக் பகுதியிலும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *