
பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டையும், மக்களையும் பாதுப்பதை விட்டு விட்டு, இதை வைத்து அரசியல் செய்வதை கட்சித் தலைவர்கள் கைவிட வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
கற்பிட்டி நுரைச்சோலை ஹாஜராவத்தை ஹஜருல் அஸ்வத் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று இரவு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நுரைச்சோலை ஹாஜராவத்தை ஹஜருல் அஸ்வத் பாலர் பாடசாலையின் ஆசிரியை பாத்திமா ஹகீமா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீன், பாராளுமன்ற உறுப்பினரின் நுரைச்சோலை அமைப்பாளர் முஹம்மது ஹஸீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் எம்.எச்.எம்.நஜாத் ஆசிரியர் உட்பட ஹாஜராவத்தை மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம்,
சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் தமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு 30 வருடங்களுக்கு பின்னர் தெரிவுசெய்யப்பட்ட என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்க்கவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காக மக்கள் தெரிவு செய்யவில்லை.
வீடு, காணி, தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றோடு வீதி, மின்சாரம், கல்வி என பின்னடைந்து காணப்படுகின்ற பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
எனவே, எனது மாவட்ட மக்களுடைய எதிர்ப்ப்புக்களை நிறைவேற்றுவது எனது கடமையாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களை புதைத்து விட்டு கட்சியிலுள்ளவர்களை திருப்த்திப்படுத்த எனது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை.
எனது கட்சியை விட மக்களின் அபிலாஷைகளே எனக்கு முக்கியம் எனக் கருதி, எனது மாவட்ட மக்களின் அங்கீகாரத்தோடு அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறேன்.
அரசுக்கு ஆதரவு உறுப்பினராக செயற்பட்டு வரும் நாள் முதல் புத்தளம் மாவட்டத்தில் இந்த வருடம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
ஒரு எதிர்க்கட்சியில் பெயரளவில் உறுப்பினராக இருப்பதை விட, அரசோடு இணைந்து மக்களுக்கு பணியாற்றுவது ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது.
கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் 11 கட்சிகள் பங்கேற்று தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தன. 6 கட்சிகள் இதில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பெரும்பான்மைக் கட்சிகளும், சில சிறுபான்மைக் கட்சிகளும் இதில் பங்கேற்கவில்லை.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவதற்காகவே இந்த சர்வ கட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனவே, நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் உண்மையான அன்பு கொண்டிருந்தால் அந்த ஆறு கட்சித் தலைவர்களும் சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்றிருப்பார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை பாதுகாப்பது தொடர்பில் தமது ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள்.
இது அரசியல் செய்யும் காலம் அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கிறது. ஆகவே, தேர்தல் காலங்களில் அரசியல் செய்யவே வேண்டும். ஆனால், நாடு இன்று பொருளாதார ரீதியாக பாரிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை, சமைப்பதற்கு எரிவாயு இல்லை, குடிப்பதற்கு பால்மா இல்லை, பொருட்களில் விலைகள் ஒரே நேரத்தில் பல மடங்கு விலை உயர்வு, எங்குமே வரிசை என்று இந்த நாடு முடக்கிக் கிடக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நபரையோ அல்லது ஒரு கட்சி மீதோ விரல் நீட்ட முடியாது. இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசாங்கம் வெளிநாட்டில் பெற்றுவந்த கடன்கள் மற்றும் டொலர் இல்லாமை என்பனவற்றுடன் கொரோனா தாக்கம் போன்ற காரணங்களால் எமது நாடு இன்று கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடிநிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
இவ்வாறு ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்காமல் ஜனாதிபதியையும், பிரதமரையும், இந்த அரசாங்கத்தையும் எப்போதும் குற்றம் சுமத்திக்கொண்டே இருந்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து தாய் நாட்டை எப்படி பாதுகாப்பது.
அதுபோல நாட்டில் வாழும் மக்களும் ஆடம்ர செலவுகளை குறைத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் ஆட்சி மாற்றுங்கள், அரசியல் பேசுங்கள். ஆனால், இன்றைய இக்கட்டான இந்த சூழ்நிலையில் அரசியல் பேசாமல் தாய் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்காத சிறுபான்மை கட்சிகளின் தலைவர்ளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
முஸ்லிம் தேசிய கூட்டணி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.
அ.இ.ம.கா , ஸ்ரீ.மு.கா உள்ளிட்ட கட்சிகள் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணியில் தனித்துப் போட்டியிட்டதுடன், அதில் பாராளுமன்ற உறுப்பினராக அலிசப்ரி ரஹீம் தெரிவானார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கியது முதல் அரசுக்கு ஆதரவு உறுப்பினராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.