
பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது. பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அடிப்படை திறன் இல்லாதவரை நிதியமைச்சராக்கி நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதியமைச்சருக்கு பொருளாதார திறன் இல்லாத காரணத்தினால் தான் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான தன்மை கிடையாது.
வறுமை கோட்டில் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மை நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட துறைசார் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள்.
யுத்த வெற்றியினை குடும்ப வெற்றியாக்கி தற்போதைய அரசாங்கம் முழு நாட்டையும் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
30 வருட கால யுத்தத்தை நான் முடிவிற்கு கொண்டு வந்தேன் என இலங்கை மக்களிடம் பெருமையாக குறிப்பிடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்திடம் நான் யுத்தத்திற்கு தலைமை தாங்கவில்லை முப்படையினர் தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்கள் என குறிப்பிட்டுக் கொள்கிறார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு எம்.சி.சி. ஒப்பந்தம் பிரதான காரணியாக அமைந்தது.
நல்லாட்சி அரசாங்கம் எவ்வகையிலாவது எம்.சி.சி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இருந்ததால் மாற்று சக்தியை தீர்மானிக்க வேண்டிய தேவை காணப்பட்டதால் அப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கினேன். ஆனால் தற்போது அதனையிட்டு மனம் வருந்துகிறேன்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எம்.சி.சி.ஒப்பந்தத்தை காட்டிலும் பாரதூரமான விளைவினை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய அரசாங்கத்தை போன்று ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் நாட்டை இவ்வாறு சீரழிக்கவில்லை.
பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜனாதிபதி குறிப்பிடுகின்றமை ஆச்சிரியத்திற்குரியது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் அடிப்படை திறன் இல்லாதவரை நிதியமைச்சராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஜனாதிபதியே இல்லாதொழித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும். நிதியமைச்சருக்கு பொருளாதார திறன் இல்லாத காரணத்தினால் தான் ஜனாதிபதி அவருக்கு ஆலோசனை வழங்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்துள்ளார்.
சிறந்த ஆலோசனைகளுக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மதிப்பளிப்பதில்லை. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஏனைய குழுக்களை போன்றதொரு குழுவாகவே பொருளாதார ஆலோசனை குழுவும் பயனற்றதாக காணப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் வெகுவிரைவில் ஒன்றுத்திரண்டு வீதிக்கிறங்குவார்கள். – என்றார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ வசம் நிறைவேற்றதிகாரம் இருக்கும் வரை நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.