
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமாக ஐந்து மதுபான சுற்றிவளைப்புகளில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 50 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 1,315 லீற்றர் கோடா, மூன்று செப்புத் தகடுகள், 10 பீப்பாய்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனுராதபுரம் கெப்பத்திக்கொல்லாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 04 கிலோகிராம் கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 09 கிராம் 790 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வெல்லம்பிட்டிய, மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 200 புகைத்தற் பொருட்கள், 02 கிலோகிராம் போதைப் பொருள் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குருணாகல், வெல்லவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டதுடன் அதனை டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
23, 31 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மாத்தறை தெனியாய பிரதேசத்திலும் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை டிப்பர் ரக வாகனத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.