
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்தார்.
28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் 05 ஆவது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை தமிழர் தரப்பு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (28) பிற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தொழில்நுட்பம் ஊடாக திறக்கும் நிகழ்விலும் இந்திய வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார்.