ரணில் ஆலோசனை சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது! – அதாஉல்லாஹ்

ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது. ஏனெனில் ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

ரணில் விக்ரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது. ஏனெனில் ரணிலின் ஆட்சியில் தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன.

அவருக்கு நெல்லு (அரிசி) தெரியாது. எனவே இனவாதத்தை வைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. உணவுப்பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். தற்போது அரசாங்கத்துடன் 11 கட்சிகளுடன் நாமும் ஒன்றாகவே இருக்கின்றோம்.

எமது கட்சி ஒரு தனி கட்சி. எங்களது கட்சியின் முக்கிய நோக்கம் நாட்டுப்பற்று ஆகும். இந்த நோக்கம் தான் அரசாங்கத்துடன் எமது கட்சியை ஒத்து போக வைக்கின்றது.

எனவே தான் எமது நாட்டிற்கு வெளிநாட்டு சக்திகளினால் தீங்கு ஏற்படக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். உலகம் இன்று 3 ஆவது போருக்காக தயாராகி வருகின்றது.

இதில் யார் சண்டியர் என்பதை தேடி கொண்டிருக்கின்றனர். எனவே தான் இவ்வாறான சண்டியர்களுக்கு ஆக்கிரமிக்கின்ற மற்றும் தேவைப்படும் இடமாக இலங்கை இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எம்சிசி ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க தற்போது ஆலோசனை கூற வருகின்றார்.

சில நாடுகள் தங்கள் எதிரிகளை தாக்குவதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த பார்ப்பார்கள்.இதனால் எமது வீட்டினுள் தான் யுத்தம் ஆரம்பமாகும். நாங்கள் பொருளாதார நிலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற அவல நிலையை பாவித்து எமது நாட்டின் வளத்தை சூறையாடுகின்ற எந்த சக்தியாக இருந்தாலும் தேசிய காங்கிரஸ் கட்சி சகல கட்சிகளுடன் இணைந்து பாடுபடும் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று சாய்ந்தமருது நகரசபை விடயமும் கால ஓட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் சில முஸ்லீம் பிரமுகர்களினால் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் முஸ்லீம் கூட்டமைப்பு என்பது தீத்தக்கரை வியாபாரம் என்பதற்கு ஒப்பானது. எந்த கூட்டமைப்பும் மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதே எமது கருத்தாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *