
முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரிக்கு எதிராக, ஒழுக்காற்றுக் குழுவினூடாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் என்ற தீர்மானம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூட்டணியின் செயலாளர் நாயகம் க.யோகராஜா தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.ராஜலிங்கம் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சி முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் முக்கிய பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
தமிழ்த் தேசியத்தோடு இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளல், கட்சியின் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு பொதுச் சபை அங்கீகாரத்துடன் மாற்றியமைத்தல், ஆனந்தசங்கரி தனிப்பட்ட நலனுக்காக கட்சியினை பின்னடையச் செய்தமை மட்டுமல்லாது கட்சி உறுப்பினர்களைத் தவறான முறையில் வழிநடத்தியமை மற்றும் கட்சி அலுவலகத்தினைத் தனிப்பட்ட நலன்கருதி பயன்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழுவினூடாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழ்த் தவைர்களின் உருவச் சிலைகளை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து செயற்பட்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பணியாற்றல், தற்போது மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான வ.குபேரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.யோகராஜா, இணைப்பொருளாளர்களான வ.சந்;திரன், தி.சம்பந்தன், நிருவாகச் செயலாளர் கௌரிகாந்தன் உள்ளிட்ட வடகிழக்கைச் சேர்ந்த கடசியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.