ஊடகங்கள் மக்களுக்கு மனரீதியான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன! – கெஹெலிய குற்றச்சாட்டு

மக்கள் கஷ்டப்படும் மிகவும் சிரமமான காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் மக்களுக்கு மேலும் கஷ்டங்களை ஏற்படுத்தி மக்களை மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி கலகெதர பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில ஊடகங்கள் மக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பு செய்து, நாட்டில் மிகவும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக காட்ட முயற்சித்து வருகின்றன.

கொரோனாத் தொற்று நோய் நிலைமை காரணமாக நாளாந்த வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது உலகில் அனைத்து நாடுகளிலும் பெருந்தொகையான மக்கள் மனநல சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாடு என்ற வகையில் இது தொடர்பாக நாம் கூடுதல் கவனத்தை செலுத்தாவிட்டாலும் தற்போது இந்த விடயம் தொடர்பாக சிறப்பு கவனத்தை செலுத்தி செயற்பட்டு வருகின்றோம்.

ஊடகங்களில் காட்டப்படும் விடயங்கள் சர்வதேசம் வரை செல்லும். இது நாட்டுக்கு தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்களின் வருகைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் தீர்வை காணக் கூடிய நிலைமை காணப்படவில்லை என்பதை இரண்டு பிரதான கட்சிகள் ஏற்றுக்கொண்டு, சர்வக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டமை சிறந்த முன்னேற்றம்.

நல்லெண்ணத்தில் ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாட்டை கூட்டினார். எனினும் காணப்படும் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என காத்திருக்கும் தரப்பினர் மாத்திரம் அதில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *