ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 4ஆவது லீக் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அறிமுக அணிகளான குஜராத் டைடன்ஸ் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தீபக் ஹூடா 55 ஓட்டங்களையும் ஆயுஷ் படோனி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராகுல் டிவெட்டியா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் குர்ணல் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் ஷமி தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *