
அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 10.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த சாய்ந்தமருது பெற்றோல் முகவர் நிலைய அதிபர் ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன், அதில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.