
புதிய அரசமைப்பில் 13ஆம் திருத்தச் சட்டத்தைத் தாண்டிய அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனவே புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில் இணைந்து காலத்தை இழுத்தடிக்க அரசுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது என்று ஜெய்சங்கர் வினவினார். ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார். 13ஆம் திருத்தத்தை கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடனான பேச்சு விவகாரங்களை விவரிக்குமாறு எம்.ஏ.சுமந்திரனைஇ சம்பந்தன் கேட்டுக் கொண்டார். 5 விடயங்களின் அடிப்படையில் பேச்சு நடைபெற்றதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துஇ அந்த விடயங்களை விவரித்தார். அதில் 4 விடயங்கள் தொடர்பில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர் புதிய அரசமைப்பில்இ 13 ஆம் திருத்தத்தை தாண்டிய அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறும் என்று நம்பவில்லை. இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்க நிகழ்ச்சி நிரலில் நீங்களும் (கூட்டமைப்பு) பங்கேற்றால் அரச தரப்பு அதனைச் சொல்லியே காலத்தை இழுத்தடிக்கும். எனவே ஏனைய விவகாரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். புதிய அரசமைப்புக்காக காத்திருந்தீர்கள் என்றால் அரசு நீண்டகாலத்தை அதற்குள் முடக்கி எதையும் பெற்றுக்கொள்ளாத சூழல்கூட உருவாகலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இதன்போது கருத்து தெரிவித்த த.சித்தார்த்தன், புதிய அரசமைப்பு உருவாகுமென நானும் நம்பவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, புதிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களை தடுப்பது போன்றவற்றை செய்ய எத்தனிக்கிறோம் என்றார். அதுதான் சரியான அணுகுமுறை என எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன், 13ஆம் திருத்தத்தை வலியுறுத்தி 6 தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளோம். எனினும் இந்தியத் தரப்பிலிருந்து போதுமான பிரதிபலிப்பு இருக்கவில்லை. அந்த முயற்சிக்கு அங்கீகாரமளிப்பதை போல இந்தியா செயற்பட வேண்டும். அப்படி இந்தியா செயற்பட்டால்தான் தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வாய்ப்பு ஏற்படும். அத்துடன் அரசுக்கும் அழுத்தம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.